துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்தியாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் மிகவும் குறிப்பிடும்படியான, சிறப்புமிக்க ஒரு தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏவிஎம் ஸ்டூடியோ என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ரசிகர்களின் நாடித் துடிப்பறிந்து, பல தரமான கலைப் படைப்புகளைத் தந்ததோடு, சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்ற திரைமேதைகளை புதுமுகங்களாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்கும் உரிய தயாரிப்பு நிறுவனம் இது.
தலைமுறைகள் கடந்தும் தனது தனித்துவத்தை என்றும் இழக்காத இம்மாபெரும் தயாரிப்பு நிறுவனம், “பராசக்தி”, “பாவமன்னிப்பு”, “பார்த்தால் பசி தீரும்” என நடிகர் சிவாஜி கணேசனை வைத்து பல காவியத் திரைப்படங்களைத் தந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் “உயர்ந்த மனிதன்”. இது 1966ஆம் ஆண்டு வெளிவந்த “உத்தர் புருஷ்” என்ற பெங்காலி திரைப்படத்தின் தமிழ் உருவாக்கமாக வந்து தமிழகமெங்கும் வெற்றி வாகை சூடியது.
“உயர்ந்த மனிதன்” கதையை திரைப்படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டு, நடிகர் சிவாஜி கணேசனிடம் கதையை சுருக்கமாக ஏவிஎம் சரவணன் கூறினார். கதையைக் கேட்ட சிவாஜி, கதைப்படி நடிகர் அசோகன் ஏற்று நடித்திருந்த அந்த டாக்டர் கதாபாத்திரம் சிறியதென்றாலும் வலுவான, அழுத்தமான கதாபாத்திரமாக இருக்கிறது. படத்தில் அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் வரும் எனது மகன் கதாபாத்திரத்தை நான் அடிப்பது போலவும், மனைவிக்குத் தெரியாமல் பல ரகசியங்களை மறைப்பது போலவும் உள்ள குணாதிசயங்கள் கொண்ட அந்த தந்தையின் கதாபாத்திரம் எனக்கு வேண்டாம் என சிவாஜி மறுத்துக் கூறி உள்ளார். அதேசமயம் ஏவிஎம் பேனரில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் எனக்கு எப்போதும் நிறைய உண்டு. இதுவரை கவுரவ வேடம் ஏதும் நான் போட்டதேயில்லை. எனவே அந்த டாக்டரின் கதாபாத்திரத்தை எனக்கு கொடுங்கள்; வெறும் நான்கே காட்சியாக இருந்தாலும் பரவாயில்லை கவுரவ வேடத்தில் நான் நடிக்கின்றேன் என தனது விருப்பத்தை ஏவிஎம் சரவணனிடம் கூறினார் சிவாஜி.
சிவாஜி கூறிய அந்தக் கருத்தை தன் தந்தையிடம் ஏவிஎம் சரவணன் கூற, சற்றும் யோசிக்காமல் சிவாஜி அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தால், “உயர்ந்த மனிதன்” படமே வேண்டாம் என கறாராகச் சொல்லிவிட்டார் ஏவி. மெய்யப்ப செட்டியார். அதன்பின் சிவாஜியை சமாதானப்படுத்தி படத்தில் நடிக்க வைத்தனர். இரட்டை இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி, வாணிஸ்ரீ, சவுகார் ஜானகி, எஸ்ஏ அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், சிவக்குமார், பாரதி, எஸ் வி ராமதாஸ், வி கே ராமசாமி, மனோரமா என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.
1968ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற இத்திரைப்படம், நடிகர் திலகம் சிவாஜியின் 125வது திரைப்படம் என்ற பெருமையுடன் வந்து, சிவாஜியின் வெள்ளித்திரைப் பயணத்தில் சொல்லிக் கொள்ளும் அளவில் ஓர் உயர்ந்த இடத்தையும் பிடித்திருந்தது.