ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
மலையாள திரையுலகில் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் தீபு கருணாகரன் என்பவர் தான் இயக்கியுள்ள மிஸ்டர் அண்ட் மிஸஸ் பேச்சுலர் படத்தின் கதாநாயகி அனஸ்வரா ராஜன், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுக்கிறார் என குற்றம் சாட்டினார். அதற்கு சம்பந்தப்பட்ட நடிகை பதிலடி கொடுத்து தற்போது அந்த விவகாரம் சுமூகமாக முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்ததாக தற்போது நான்சி ராணி என்கிற படத்தின் பெண் இயக்குனர் நீனா என்பவர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஆஹானா கிருஷ்ணா தனது படத்தின் பணிகளில் ஒத்துழைக்க மறுப்பதாகவும் படத்தை புரோமோட் பண்ண மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நான்சி ராணி படம் துவங்கப்பட்டது, கடந்த 2020ம் வருடம். முதலில் இந்த படத்தை இயக்கியது மனு ஜேம்ஸ். 2023ல் அவர் எதிர்பாராத விதமாக இறந்து விட டைரக்சன் பொறுப்பை அவரது மனைவி நீனா ஏற்றார். ஆஹானா கிருஷ்ணாவால் நாங்கள் பல தொல்லைகளை சந்தித்தோம். இந்த படத்தை முடிக்க முடியாமல் சிரமப்பட்டோம் என்பது போன்று நீனா பேட்டி கொடுத்திருந்தார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ஆஹானா கிருஷ்ணா, “இது குறித்து எதுவும் பேசக்கூடாது என்று தான் அமைதியாக இருந்தேன். ஆனால் நீனா பொய்யான தகவல்களை உண்மை போல பேசி வருகிறார். இறந்து போனவர் (மனு ஜேம்ஸ்) பற்றி விமர்சிக்க கூடாது என்பதால் தான் அமைதியாக இருந்தேன்..
மனு ஜேம்ஸ்க்கு டைரக்ஷன் பற்றியும், தயாரிப்பு நிர்வாகம் பற்றியும் எந்தவித திறமையும் இல்லை. அப்போதே நாங்கள் ஒரு நல்ல உதவி இயக்குனரையும் தயாரிப்பு நிர்வாகியையும் உதவிக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றோம். ஆனால் மறுத்துவிட்டார். பல நாட்கள் இதனால் படப்பிடிப்புக்கு தடங்கல் ஏற்பட்டது. அது மட்டுமல்ல கேரவனில் அமர்ந்து உதவி இயக்குனர்களுடன் சேர்ந்து குடித்துக் கொண்டிருப்பார் மனு ஜேம்ஸ். அது குறித்த வாட்ஸ்அப் ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.
அவர் 2021ல் இறந்து விட்டார். அதன் பிறகு அவர் மனைவி நீனா டைரக்ஷன் பொறுப்பை எடுத்துக் கொண்டார். ஆனாலும் அவரும் என்னிடம் மட்டுமல்ல, மற்ற சிலரிடமும் பொறுப்பில்லாமல் தான் நடந்து கொண்டார். வேண்டுமென்று என் மீது அவதூறுகளை சுமத்தினார். கிளைமாக்ஸ் காட்சியை நான் இல்லாமலேயே என்னைப் போன்ற வேறு ஒரு சாயல் கொண்ட பெண்ணை வைத்து படமாக்கி முடித்தார். இந்த தகவல் படக்குழுவில் பணியாற்றிய சிலரால் என் காதுக்கு வந்தது.
என்னை டப்பிங் பேச அழைக்காமல் வேறு ஒருவரை வைத்து டப்பிங் பேச வைத்து பார்த்தார்கள். அது ஒத்துவரவில்லை என்றதும் என் தாய்க்கு போன் செய்து என்னை டப்பிங் பேச அழைத்தார்கள். அப்போது என் அம்மா படப்பிடிப்பு பிரச்சனைகள் குறித்து பேச, அதற்கு அவர் என் கணவராவது படப்பிடிப்பில் குடிக்கத்தான் செய்தார். ஆனால் உங்கள் மகள் படப்பிடிப்பில் போதை பொருள் பயன்படுத்தினார் என என் மீது தவறான கருத்துக்களை கூறி, அவர்கள் மீதான பிரச்சனையை திசை திருப்ப முயற்சித்தார். இதெல்லாம் முடிந்து இந்த படம் வெளியாகி நல்லபடியாக ஓடினால் மனு ஜேம்ஸின் ஆன்மா சந்தோஷப்படுத்தும் என்று மட்டும் தான் என்னால் கூற முடியும்” என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.