தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்திய அளவில் மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் தான் திரையுலகினரால் உயர்வாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு மாநில அளவில் திரையுலகினருக்காக வழங்கப்படும் விருதுகளில் நீண்ட கால பெருமையும், மதிப்புமிக்கதாகவும் கருதப்படுவது நந்தி விருதுகள். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு திரையுலகினருக்காக வழங்கப்பட்ட விருதுகள் அவை.
1964ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த 'நந்தி விருதுகள்', 2016ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. ஒன்றுபட்ட ஆந்திர பிரதேச மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களாகப் பிரிந்த பிறகு நந்தி விருதுகள் வழங்கப்படுவதில்லை. இருந்தாலும் இந்த ஆண்டு முதல் 'கட்டார் விருதுகள்' என்ற பெயரில் திரையுலகினருக்கான விருதுகளை வழங்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
இதனிடையே, கடந்த பல வருடங்களாக பெருமைமிகு விருதாக இருந்த 'நந்தி விருதுகளை' மீண்டும் வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநில சினிமாடோகிராபி அமைச்சர் கண்டுல துர்கேஷ் இது பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். விரைவில் அதற்குரிய வேலைகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திர மாநிலத்தில் சினிமாத்துறையின் வளர்ச்சிக்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் திரைப்படக் கொள்கை ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன் மூலம் விசாகப்பட்டிணத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய திரைப்பட ஸ்டுடியோ ஒன்று கட்டப்படும் திட்டம் உள்ளதாகவும், விரைவில் திரைப்படக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாகவும் பேசியுள்ளார்.
ஒரு காலத்தில் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தெலுங்கு சினிமா தற்போது ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. விரைவில் அங்கிருந்து பிரிந்து விசாகப்பட்டிணம் செல்லக் கூடிய சூழல் வரலாம். அது ஆரோக்கியமாகப் போகுமா அல்லது போட்டியாகப் போகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.