Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்”

04 ஜூன், 2025 - 08:18 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Aayirathil-oruvan-Who-Created-Many-Innovations

எம்.ஜி.ஆர் நடித்து வெளிவந்த அவரது 136 திரைப்படங்ளில் ஆகச் சிறந்த அவரது முதல் பத்து திரைப்படங்கள் என்று பட்டியலிடச் சொன்னால் அதில் “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்திற்கென ஒரு தனி இடம் எப்போதும் இருப்பதுண்டு. 1965ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் பல முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒரு காவியத் திரைப்படமாக இன்றும் தமிழ் திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது என்றால் அது மிகையன்று.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கும் மற்ற நாயகர்களின் திரைப்படங்களுக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசம் எது என்றால் படத்தின் தலைப்பைச் சொல்லலாம். “புதிய பூமி”, “நம் நாடு”, “நாளை நமதே” என்று சமூக நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக, “தொழிலாளி”, “விவசாயி”, “ரிக்ஷாக்காரன்”, “உழைக்கும் கரங்கள்” என்று உழைக்கும் வர்க்கத்தின் உயர்வைப் போற்றும் விதமாக, “தாய்க்குப் பின் தாரம்”, “தாய் சொல்லைத் தட்டாதே”, “தாயைக் காத்த தனயன்”, “தாய்க்குத் தலைமகன்” என்று தாயின் உன்னதத்தை உணர்த்தும் விதமாக படத் தலைப்புகளை அமைத்துக் கொள்வதில் அவர் மிக எச்சரிக்கையாக இருந்து வந்தார். அப்படி வந்த ஒரு எம்.ஜி.ஆர் திரைப்படம்தான் இந்த “ஆயிரத்தில் ஒருவன்”.

“வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கப்பலோட்டிய தமிழன்”, “கர்ணன்” போன்ற தரமான காவியத் திரைப்படங்களைத் தந்த தயாரிப்பாளரும், இயக்குநருமான பிஆர் பந்துலு, முதன்முதலாக எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்து, இயக்கி வண்ணத் திரைக்காவியமாக தந்ததுதான் இந்த “ஆயிரத்தில் ஒருவன்”.



“கேப்டன் ப்ளட்”, “தி க்ரிம்ஸன் பைரேட்”, “தி ப்ளாக் பைரேட்” போன்ற ஒரு சில ஆங்கில கடற்கொள்ளையர் திரைப்படங்களின் தாக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் முதன் முதலாக எம்.ஜி.ஆருடன் இணைந்து நாயகியாக நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றிருந்தார் ஜெயலலிதா. கதை வசனகர்த்தா ஆர்கே ஷண்முகம் எம்.ஜி.ஆருக்காக வசனம் எழுதிய முதல் திரைப்படமாகவும் வெளிவந்த திரைப்படம்தான் “ஆயிரத்தில் ஒருவன்”.

இந்தப் படத்திற்கு “ஆயிரத்தில் ஒருவன்” என்று பெயரை தெரிவு செய்ததும் இவரே. படத்திற்கு பெயர் வைத்தது யார்? என்று எம்.ஜி.ஆர் கேட்க, ஆர்.கே.ஷண்முகம் என்று சொன்னவுடனே தனது சட்டைப் பையிலிருந்து ரூபாய் 1000ஐ எடுத்து அவரிடம் கொடுத்து அவரை பாராட்டினாராம். பணத்தைப் பெற்ற ஆர் கே ஷண்முகம், இப்படி என்று தெரிந்திருந்தால் படத்திற்கு “லட்சத்தில் ஒருவன்” என்று பெயர் வைத்திருப்பேனே என்று சொல்ல, அருகிலிருந்த எம்.ஜி.ஆர் மனம்விட்டு சிரித்திருக்கின்றார்.

இந்தப் படம் இன்னும் ஓர் முக்கிய நிகழ்வினை நினைவுபடுத்தும் திரைப்படமாகவும் இருந்திருக்கிறது. முழுக்க கர்நாடக இசையின் பின்புலம் கொண்டு பயணித்து வந்த தமிழ் திரையிசைப் பாடல்களை கடைக்கோடி பாமர ரசிகனும் கேட்டு ரசிக்கும் வண்ணம் அவற்றை மெல்லிசையாக்கித் தந்த 'மெல்லிசை மன்னர்கள்' என்ற பெருமைக்குரிய விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இரட்டையர் இணைந்து இசையமைத்த கடைசி திரைப்படமாக வெளிவந்ததும் இந்த “ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படமே. இந்த திரைப்படத்திற்குப் பின் இருவரும் பிரிந்து தனியாக தங்களது திரையிசைப் பயணத்தை தொடர்ந்து வந்தனர்.

இத்திரைப்படத்தின் பெரும்பான்மையான வெளிப்புறப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள கார்வார் என்ற அழகிய கடற்கரை நகரத்தில் படமாக்கப் பட்டிருந்தது. எழில் கொஞ்சும் அந்த அழகிய கார்வார் கடற்கரையை, மிக அற்புதமாக காட்சி வடிவாக்கி, பார்க்கும் நம் கண்களுக்கு விருந்தளித்திருப்பார் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வி ராமமூர்த்தி. கவியரசர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி ஆகியோரின் கைவண்ணத்தில் விளைந்த காலத்தால் அழியா காவியம் படைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள், இன்றும் கோடானு கோடி தமிழ் திரையிசை ரசிகர்களின் நெஞ்சங்களுக்கு நெருக்கமான பாடல்களாக இருக்கிறது என்றால் அது மிகையன்று.



குறிப்பாக “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்” என்ற ஒரு பாடல் போதும். “கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை, கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை, அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை, அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை” என்று அடிமைகள் வாழும் அகிலத்தின் மூலை முடுக்களில் எல்லாம் ஓங்கி ஒலிக்கும் ஒரு உரிமை கீதம் என இப்பாடலைச் சொல்லலாம்.

இத்திரைப்படத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில், 2014ஆம் ஆண்டு டிஜிட்டல் தொழில் நுட்ப வசதியின் துணை கொண்டு, படத்தை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டனர். 50 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்து சென்னையில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி மீண்டும் வெள்ளி விழா கொண்டாடி புதுமை படைத்திருந்தது இத்திரைப்படம். படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர் நடிகைகள், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற ஆடை அணிமணிகள், படத்தின் வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, வெளிப்புறப் படப்பிடிப்பிற்கான இடம், இயக்கம் என அனைத்திலும் ஒரு நேர்த்தியைக் கையாண்டு, ஒரு நிறைவான படைப்பாகத் தந்து, இன்றும் இத்திரைப்படத்தைப் பற்றி நாம் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கும் வகையில் பல புதுமைகளைக் கொண்ட திரைப்படம்தான் இந்த “ஆயிரத்தில் ஒருவன்”.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா!முதல் முறையாக இணையும் ரவி மோகன், ... தீவிர முருக பக்தர் யோகிபாபு தீவிர முருக பக்தர் யோகிபாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in