மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா |

பல நுாறு கோடி ரூபாய் செலவில் வெளிநாடுகளில் ஷூட்டிங் நடத்தி பிரபல நடிகர், நடிகைகளை வைத்து பிரமாண்டமாக எடுத்து வெற்றி பெற்ற திரைப்படங்கள் மட்டுமின்றி, பெரியளவில் பொருட்செலவு இன்றி நான்கு சுவர்களுக்கு மத்தியில் எடுத்து வெற்றி பெற்ற திரைப்படங்களையும் இந்திய சினிமா உலகம் கண்டுள்ளது. அந்த வரிசையில் 3 பி.எச்.கே., படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருப்பது சினிமா உலகில் நம்பிக்கையை தந்துள்ளது. வெற்றி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு வரும் இயக்குனர் ஸ்ரீ கணேஷை தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக சந்தித்தோம். இனி அவரே தொடர்கிறார்....
அப்பா சென்னை, அம்மா கும்பகோணம். அப்பாவின் வேலை விஷயமாக சென்னையில் நாங்கள் குடியிருந்தாலும் பள்ளி படிப்பை கும்பகோணத்தில் முடித்தேன். கல்லுாரி படிப்புக்காக சென்னை வந்தேன். ஒரளவுக்கு நல்லா எழுதுவேன் என்பதால் சினிமா படங்களை எழுதி இயக்கும் ஆசை சிறிய வயதிலிருந்தே உண்டு. இயக்குனர் மிஷ்கினை பிடிக்கும். அவரிடம் உதவி இயக்குனராக சேர முயற்சித்து வந்தேன். அவரை சந்தித்ததை வைத்தே ஒரு கதை எடுத்து விடலாம். கொட்டும் மழையுடன் அவரது அலுவலகத்திற்கு சென்று கதவை தட்டினேன். அவரே கதவை திறந்தார். எளிமையாக இருந்தவர் உடனடியாக அலுவலக உதவியாளரிடம் மழையில் நனைந்த என் தலையை துடைக்க துண்டு கொடுக்க சொன்னதுடன் முதலில் சாப்பிட்டு விட்டு பேசுவோம் என்றார். பிறகு மறுநாளே வேலைக்கு வந்து விடும்படி கூறினார். அப்படி தான் அவரது ஓநாயும் ஆட்டுக்குட்டிகளும் படத்தில் உதவி இயக்குனரானேன். பிறகு 2017ல் '8 தோட்டாக்கள்' என்ற கிரைம் கலந்த திரில்லர் படத்தை முதல் முறையாக இயக்கினேன். அது ஓரளவுக்கு போனது. பிறகு 'குருதி ஆட்டம்' பட வாய்ப்பு வந்தது.
3 பி.எச்.கே., நான் இயக்கிய 3வது படம். சொந்த வீடு வாங்க ஆசை எல்லோருக்குமே இருக்கும். நான் சிறுவனாக இருக்கும் போது நாங்கள் குடும்பத்துடன் ஒவ்வொரு வீடாக வாடகைக்கு மாறியிருக்கிறோம். அந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். அதை எதார்த்தம் மாறாமல் நடுத்தர குடும்பம் எப்படி சொந்த வீடு வாங்க ஆசைபடுகிறது, எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகளை சுவாரஸ்யத்துடன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 3 பி.எச்.கே.,யை இயக்கினேன். நான் எதிர்பார்த்த மாதிரியே படம் மக்களிடம் நல்ல முறையில் 'ரீச்' ஆகியிருக்கிறது. தங்கள் வாழ்வில் நடந்த அனுபவத்தை படமாக தந்திருப்பதாக உணர்ச்சி பெருக்குடன் மக்கள் தெரிவிப்பது மகிழ்ச்சியை தருகிறது. எங்கள் குடும்பத்தினரும் படத்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்டனர். திரையிட்ட எல்லா தியேட்டர்களிலுமே படம் கொண்டாடப்படுகிறது.
நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், நடிகை தேவயானி போன்றவர்களை தேர்வு செய்து தகுந்த கேரக்டர்களில் நடிக்க வைத்ததையும் எல்லோரும் பாராட்டுகின்றனர். இவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என எனக்கு தோன்றியது. ஆக் ஷன் ஸ்டாரான சரத்குமாரை மென்மையாக நடிக்க வைத்திருப்பதாக சினிமா பிரபலங்களே குறிப்பிட்டு சொல்வது சந்தோஷம்.
அடுத்த கதை தயாராகிறது. 3 பி.எச்.கே.,யை விட நன்றாக தர வேண்டும் என்ற பயமும் இருக்கிறது. நல்ல கதையம்சமுள்ள படங்களை கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பர். அதை தான் 3 பி.எச்.கே., வெற்றி சொல்கிறது என்றார்.