ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி |
பழம்பெரும் இயக்குனர், கதாசிரியர், நாடக ஆசிரியர் சித்ராலயா கோபு தனது 90வது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இயக்குனர் ஸ்ரீதரின் உறவினர் சித்ராலயா கோபு. ஸ்ரீதர் சினிமாவில் சாதனை படைத்துக் கொண்டிருந்தபோது கோபு நாடகங்களில் சாதனை படைத்துக் கொண்டிருந்தார். அந்தக்காலத்தில் கோபுவின் நகைச்சுவை நாடகங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும்.
பின்னாளில் அவர் சினிமாவில் பணியாற்றும் ஆசை கொண்டு, ஸ்ரீதரிடம் உதவியாளராக சேர்ந்து அவருடன் பணியாற்றினார். கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு , வீட்டுக்கு வீடு, சுமதி என் சுந்தரி, நில் கவனி காதலி, தொடங்கி பாட்டி சொல்லை தட்டாதே வரை 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். சடகோபன் என்கிற இயற்பெயரின் சுருக்கம் கோபு. ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனத்தில் பணிபுரிந்ததால் சித்ராலயா கோபு.
இவர் நடத்தி வந்த காசேதான் கடவுளடா நாடகத்தை பின்னாளில் ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாக தயாரித்தது. அந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் சித்ராலயா கோபு. அதன் பிறகு அத்தையா மாமியா, பெண் ஒன்று கண்டேன், காலமடி காலம், ராசி நல்ல ராசி, அலங்காரி, ஆசைக்கு வயசில்லை, தைரியலட்சுமி, வெள்ளை மனசு, வசந்தி, டில்லி பாபு படங்களை இயக்கினார். டில்லி பாபு தான் கடைசியாக இயக்கிய படம், உலகம் பிறந்தது எனக்காக கடைசியா கதை எழுதிய படம்.
யூனிட்டி கிளப்பின் மூலம், பல நாடகங்களை எழுதிய இவர், வாஷிங்டனில் திருமணம் சின்னத்திரை தொடரை அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தி இயக்கினார். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தொலைக்காட்சி தொடர் இது.
முதுமை காரணமாக திரைப்படத் துறையில் இருந்து விலகி இருக்கும் அவர் திருவான்மியூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருக்கு காசேதான் கடவுளடா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்பது ஆசை. இதற்கான கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதி முடித்து விட்டார். 90வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள அவரை திரையுலகினர் வாழ்த்தி வருகிறார்கள்.