ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் பெண்கள், குறிப்பாக நடிகைகள் பலர் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் இயக்குனர்கள், ஹீரோக்கள், தயாரிப்பாளர்களுடன் அட்ஜஸ்ட் செய்து செல்ல வேண்டும் என நிர்பந்திக்கப்படும் சூழல் கடந்த சில வருடங்களாகவே இருக்கிறது என சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளிப்படையாக கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படி பாதிக்கப்பட்ட நடிகைகள் பலரும் மலையாள பிரபலங்களுடனான தங்களது கசப்பான அனுபவங்களை அடுத்தடுத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் துணை நடிகை ரேவதி சம்பத் என்பவரின் பாலியல் புகார் குற்றச்சாட்டுக்கு ஆளானார் சீனியர் நடிகரும், மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த நடிகர் சித்திக். இதைத்தொடர்ந்து அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சம்பந்தப்பட்ட நடிகை மீது காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.
அதேசமயம் இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்படாத நடிகைகள் சிலரையும் இது போன்ற விஷயங்களில் இணைத்து செய்திகள் வெளியாவதும் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் சித்திக்குடன் திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் சித்திக்கின் மனைவி கதாபாத்திரத்தில் இணைந்து நடித்த நடிகை ஆஷா சரத் கூட சித்திக்கின் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானார் என்று ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பதில் அளித்துள்ள ஆஷா சரத், “சித்திக்குடன் இணைந்து நடித்தபோது எனக்கு அவரிடம் இருந்து எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. மரியாதை மிக்க ஒரு சக நடிகராக. ஒரு நல்ல நண்பராகவே என்னிடம் பழகினார். என்னிடம் அவர் தவறாக நடக்க முயற்சித்தார் என்பது போன்று செய்திகளை எதற்காக வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்கள் மீது அவதூறு வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். மற்றபடி ஹேமா கமிஷன் அறிக்கை பரிந்துரை செய்துள்ள விஷயங்களை அரசு விரைந்து செயல்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.