இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தென்னிந்திய திரையுலகில் கோலோச்சியிருந்த அந்தக்கால கதாநாயக நடிகர்கள் பலரில், தனித்துவமிக்க நாயகனாக தோன்றி, தனக்கான கொள்கைகளை வரையறுத்து, அதன்படியே தான் நடிக்கும் திரைப்படங்களின் கதாபாத்திரங்களிலும், பேசும் வசனங்களிலும், படத்தில் இடம் பெறும் தனக்கான பாடல்களிலும் அவை இடம்பெறும் வண்ணம் தனிக்கவனம் செலுத்தி, தான் திரைத்துறையில் இருந்த காலம் வரை, ஒரு தவிர்க்க முடியாத தலைசிறந்த நாயகனாகவே தமிழ் திரையுலகில் பயணித்து வெற்றிவாகை சூடியவர்தான் 'மக்கள் திலகம்' எம் ஜி ஆர். தன் படங்களை பார்த்து மகிழும் தன்னுடைய ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த நல்லவைகளை தனது படத்தில் இடம்பெறும் பாடல்கள் மூலமாகவோ, வசனங்கள் மூலமாகவோ, தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவோ கடத்த முயற்சித்து, அதில் முழுமையான வெற்றியும் கண்டவர்தான் எம்ஜிஆர்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையை மனதிற் கொண்டு, நேர்மறையான கருத்துக்களை மட்டுமே சுமந்து வரும் இவரது படங்;களை பார்க்கச் செல்லும் இவரது ரசிகர்கள், என்ன மாதிரியான உற்சாக உணர்வோடு திரையரங்கிற்குச் செல்கிறார்களோ, அதே உற்சாக உணர்வோடுதான் படத்தைப் பார்த்து திரும்பும் போதும் இருக்க வேண்டும் என்பது இவரது கலைப் படைப்புகளின் தன்மை. அப்படிப்பட்ட இவரது திரைப்படங்களில் வரும் கனமான காட்சிகளில் இடம்பெறும் பாடல்களைக் கூட, ஒரு உற்சாக மனநிலைக்கு எடுத்துச் செல்லும் பாடல்களாக மாற்றி அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார் எம் ஜி ஆர். 1974ஆம் ஆண்டு இயக்குநர் சி வி ஸ்ரீதர், முதன் முதலில் எம் ஜி ஆரை தனது இயக்கத்தில் நடிக்க வைத்து ஒரு மாபெரும் வெற்றிப்படமாக உருவாக்கிய “உரிமைக் குரல்” என்ற திரைப்படத்தில் அப்படி ஒரு கனமான காட்சியில் இடம் பெறும் பாடல்தான் இந்தப் பாடல்.
படத்தின் நாயகி நடிகை லதாவை, வில்லன் நம்பியாருக்கு திருமணம் செய்ய நிச்சியிக்கப்பட்ட நிலையில், நாயகன் எம் ஜி ஆரும், நாயகி லதாவும் தனிமையில் ஒரு மணல் மேட்டில் தங்களது காதல் கைகூடாமல் போய்விடுமோ என்ற மனநிலையில் இருவரும் பாடுவதாக அமைந்திருக்கும் ஒரு சோகப் பாடல்தான் “விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே” என்ற பாடல். மணல் மேட்டில் நடந்தவாறே எம் ஜி ஆரும், லதாவும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் செல்ல, கானகந்தர்வன் கே ஜே ஜேசுதாஸ் குரலில் “விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே, மஞ்சள் வானம் தென்றல் சாட்சி, உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்று பாடலின் பல்லவி சோகத்துடன் ஆரம்பமாக, அப்படியே பாடல் பலவண்ண செட் அரங்கங்களுக்கு பயணப்பட்டு, கண்கவர் ஆடைகளோடு கனவுலக நாயகனாக எம் ஜி ஆரும், கனவுலக நாயகியாக லதாவும் வலம் வர, சரணம் வேகம் எடுத்து, பாடலின் தன்மையையும், நிறத்தையும் அப்படியே மாற்றி, பார்க்கும் நம்மை ஒரு உற்சாக மனநிலைக்கு கொண்டு சென்றுவிடும். இந்தப் படத்தின் அன்றைய அமோக வெற்றிக்கு இந்தப் பாடல் ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்பதே உண்மை.
எம் ஜி ஆரின் மற்றொரு படமான “கலங்கரை விளக்கம்” திரைப்படத்திலும் ஏறக்குறைய இதேபோன்ற ஒரு காட்சியமைப்பில் வரும் பாடலான “பொன்னெழில் பூத்தது புது வானில்” என்ற பாடலிலும் இதே உத்தியை கையாண்டிருப்பர். பல்லவ வரலாற்றை விரும்பிப் படித்து அதிலேயே மூழ்கிப் போய், தன்னை வரலாற்று நாயகி சிவகாமியாகவே நினைத்து வாழும் மனநலம் பாதிக்கப்பட்ட வரலாற்று மாணவி லீலா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருக்கும் சரோஜாதேவியை, குணமாக்கும் முயற்சியில் இறங்கி யிருக்கும் கதையின் நாயகன் எம் ஜி ஆர், அவரை அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் செல்ல, அங்கு சிலை செய்யும் உளி ஓசை கேட்டு, நாயகி ஆபத்தான இடத்தை நோக்கி ஓட, செய்வதறியாது திகைத்த நாயகன் 'சிவகாமி' என வரலாற்று நாயகியின் பெயரைச் சொல்லி அவளை அழைக்க, அழைத்தது பல்லவ மன்னன் என நினைத்து அவளும் திரும்பி அவனைப் பார்க்க பாடல் ஆரம்பமாகும். பல்லவ மன்னனாக எம் ஜி ஆரும், சிவகாமியாக சரோஜாதேவியும் மாறி பாடல் வேறு உலகிற்கு பார்க்கும் நம்மை அழைத்துச் செல்லும். சோக ராகங்கள் கூட இவ்வாறு சுக ராகங்களாக மாறும் வித்தை எம் ஜி ஆர் திரைப்படங்களுக்கு மட்டுமே சாத்தியம்.