மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

சென்னை : சென்னையில் நடக்க உள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இசையமைப்பாளர் அனிருத், நாளை(ஆக., 23) சென்னை அருகே கூவத்தூரில் 'ஹுக்கும்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சியை எதிர்த்து சென்னை, உயர்நீதிமன்றத்தில் செய்யூர் தொகுதி எம்எல்ஏ., பனையூர் பாபு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
செங்கல்பட்டு கலெக்டர் அனுமதி பெறாமல் இந்த இசை நிகழ்ச்சி நடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். சுமார் 30 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சிக்கு வர உள்ளதாகத் தெரிகிறது. அந்த இடத்தைத் தான் ஆய்வு செய்ததாகவும், அதற்குரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்காலிக கழிவறைகள், தண்ணீர் வசதி, மருத்துவ வசதி எதுவும் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், விழா நடக்கும் இடத்திற்குச் செல்ல குறுகலான 30 அடி கிராமப்புற சாலை மட்டுமே உள்ளது. மொத்த கூட்டமும் அந்த வழியில் செல்ல முடியாது. மேலும், கிழக்குக் கடற்கரை சாலையை இரண்டு வழிப் பாதையிலிருந்து நான்கு வழிப் பாதையாக மாற்றும் பணிகளும் தற்போது நடந்து வருகிறது. அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று(ஆக., 22) மதியம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நாளைய இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, எம்எல்ஏ பாபுவின் மனுவை நிலுவையில் வைத்துள்ளார். மேலும், எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் காவல்துறை கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வழக்கை ஆக., 28க்கு தள்ளி வைத்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அந்தப் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திய போது மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசல் என மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். வழக்கு தொடரப்பட்டு பெரும் சர்ச்சை உருவானது குறிப்பிடத்தக்கது.