ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வெள்ளித்திரையில் சொல்லிலடங்கா புதுமைகளைச் செய்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் 300க்கும் அதிகமான திரைப்படங்களை தயாரித்து, சிவாஜிகணேசன், கமல்ஹாசன், சிவக்குமார், குமாரி ருக்மணி போன்ற எண்ணிலடங்கா அற்புத திரைக்கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததோடு, அவர்களது கலை வாரிசுகளான நடிகர் பிரபு, நடிகை லக்ஷ்மி, நடிகர் சூர்யா ஆகியோரையும் தங்களது தயாரிப்பில் நடிக்க வைத்து, தலைமுறைகள் கடந்தும் தனது தனித்துவத்தை என்றும் இழக்காத ஏ வி எம் என்ற அந்த மாபெரும் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த திரைப்படங்களுக்கு என ஒரு தனிச் சிறப்பு, எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், கலையுலகினரிடமும் எப்போதும் இருந்ததுண்டு.
அப்படி ஒரு எதிர்பார்ப்புடன் 1967ம் ஆண்டு வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்ற மர்ம திகில் திரைப்படம்தான் “அதே கண்கள்”. 1965ல் ஹிந்தியில் ஏ வி எம் தயாரித்த “மெஹர்பான்” என்ற திரைப்படத்திற்காக போடப்பட்ட பிரமாண்டமான வீட்டின் 'செட்' அமைப்பை பிரித்து எடுத்துவிடாமல் அதை அப்படியே தங்களது அடுத்த தயாரிப்பான “அதே கண்கள்” திரைப்படத்திற்கும் பயன்படுத்தி புதுமை படைத்திருந்ததோடு, படத்தில் இடம் பெற்ற பாடல்களிலும் சில புதுமைகளைச் செய்து ரசிக்க வைத்திருந்தனர்.
நடிகர் ரவிச்சந்திரன், காஞ்சனா, எஸ் ஏ அசோகன், கீதாஞ்சலி, நாகேஷ், மாதவி, எஸ் வி ராமதாஸ், ஜி சகுந்தலா, கே பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், ஏ கருணாநிதி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்த வண்ணமயமான மர்ம திகில் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் வேதா. “ஓ ஓ எத்தனை அழகு இருபது வயதினிலே”, “என்னென்னமோ நான் நினைத்தேன்”, “பூம் பூம் பூ மாட்டுக்காரன்”, “வா அருகில் வா”, “கண்ணுக்குத் தெரியாதா”, “பொம்பள ஒருத்தி இருந்தாளாம்” என படத்தில் இடம் பெற்றிருந்த அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தன.
தமிழ் திரைப்படப் பாடல் ஒன்றில் சவுராஷ்டிர மொழி வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒரு பாடல் உண்டு என்றால், அது “அதே கண்கள்” திரைப்படத்தில் இடம் பெற்ற “பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தப் பார்த்து பயந்தாளாம்” என்ற பாடல்தான் என நாம் உறுதிபட கூற முடியும். பாடலின் முடிவில் “சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா”, “சொன்னவோ, சொன்னவோ, சொன்னவோ”, “தாக்கரேஸ், தாக்கரேஸ், தாக்கரேஸ்”, “தக்குனோக, தக்குனோக, தக்குனோக” என சவுராஷ்டிர மொழி வார்த்தைகளைப் பாடலில் பயன்படுத்தியிருப்பர். “விட்டுப் போ,”, “விடாதே,”, “பயமாயிருக்கு,”, “பயப்படாதே,” என்ற தமிழ் சொற்களுக்கு இணையான அந்த சவுராஷ்டிர மொழி வார்த்தைகளை ஒரு தமிழ் திரையிசைப் பாடலில் முதன் முதலாக இடம்பெறச் செய்து, அதிலும் புதுமை படைத்திருந்தனர் ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தினர்.